புழல்: செங்குன்றம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த கோட்டூர் அத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் சற்று மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ரத்தினம்(63). கட்டிட தொழிலாளி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாதபோது அவரது வீட்டில் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறியவாறு சத்தம் போட்டார். அவரது அலறலை கேட்ட அவரது தாய் ஓடி வந்தார். இதை பார்த்த ரத்தினம் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து பெண்ணின் தாய் கொடுத்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரத்தினத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.