நீடாமங்கலம், ஜன.22: அரசு ஊழியர்களாக்க கோரி நீடாமங்கலத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரேமா, பொருளாளர் மாலதி, வட்ட செயலாளர் ஜெயந்தி, ஒன்றியத்தலைவர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க வட்டத்தலைவர் சின்னையன் உள்ளிட்ட பலர் பேசினர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடை வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்ப்பட்டன. நீடாமங்கலம் ஒன்றிய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.