மஞ்சூர், ஜன.22: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல்பாஜார் பகுதியில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இப்பள்ளியை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில் மறுபுறம் செடி,கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் மாலை 4 மணியளவில் பள்ளியின் காம்பவுன்டு சுவர் மீது சிறுத்தை அமர்ந்திருந்துள்ளது. இதை பலரும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவு நேரங்களிலும் பள்ளியை ஒட்டிய குடியிருப்புகளில் சிறுத்தை நடமாடுவதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் 10 மாதங்கள் இடைவெளிக்கு பின் 10 வகுப்பு மாணவிகளுக்காக பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் சிறுத்தை அச்சம் அதிகரித்துள்ளது. இதையடுத்து பள்ளி சார்பில் சிறுத்தை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடப்பட்டது. பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா வனச்சரகம் அத்திமாநகர் பகுதியில் வசிப்பவர்கள் செல்லம்மாள்,முனியாண்டி.
கூலித் தொழிலாளர்களான இவர்களது இரண்டு ஆடுகள் நேற்று அருகே உள்ள தேவாலா ஏரோடு பகுதியில் மேய்ச்சலில் இருக்கும்போது சினையான ஒரு ஆட்டினை சிறுத்தை தாக்கி இழுத்து சென்றுள்ளது. தேவாலா ரேஞ்சர் கணேசன் உத்தரவின்பேரில் வனவர் விஜயகுமார், வனக்காப்பாளர் மில்டன்பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த போது ஆடுகள் சிறுத்தை தாக்கி உயிரிழந்ததை உறுதி செய்தனர்.