ஈரோடு, ஜன. 22: ஈரோட்டில் 1,442 மாணவ-மாணவிகளுக்கு ரூ.58.85 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி, திணடல் அரசு மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலைமகள், செங்குந்தர் பள்ளிகளில் படிக்கும் 1,442 மாணவ-மாணவிகளுக்கு ரூ.58.85 லட்சத்தில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஈரோடு டி.ஆர்.ஓ. கவிதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் தற்போது வரை 52லட்சத்து 47 ஆயிரம் மடிக்கணினிகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி, ஐ.ஐ.டி. மூலமாக ஜே.இ.இ. தேர்விற்கும், பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கரும்பலகைகள் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு விரைவில் 7,500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படவுள்ளது.