×

அந்தியூர் அருகே பைக் மீது வேன் மோதி 2 தொழிலாளர்கள் பலி

அந்தியூர், ஜன. 22:அந்தியூர் அருகே பைக் மீது வேன் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் செல்வன் (58), ராஜன் (42). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு அந்தியூரில் இருந்து தங்களது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அத்தாணி தம்மங்கரடு என்ற இடத்தில் வரும்போது எதிரே அந்தியூர் சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (51) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேன் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் வந்த இருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆம்னி வேனை ஓட்டி வந்த ராஜேந்திரனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவரும், சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Van ,Anthiyur ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; 8 பேர் கைது