கடந்தாண்டில் 39818 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தினர்

ஈரோடு, ஜன. 22: ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டில் 39818 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 37 செயல்பட்டு வருகின்றது. இதில் மலைப்பகுதிகளுக்கு மட்டும் 5 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசர அழைப்பு பெறப்பட்ட 8 முதல் 14 நிமிடங்களில் நகர்ப்புறம் மற்றும் கிராம புறங்ககளுக்கு சேவையளிக்கும் வகையில் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 39818 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் 7727 பேர் கருவுற்ற தாய்மார்கள் ஆகும். 7196 பேர் சாலை விபத்திற்காக உபயோகித்துள்ளனர். குறிப்பாக கடத்தாண்டு மட்டும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பினி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 40 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது, 8111 பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெண்டிலேட்டர், ஈசிஜி மானிட்டர் போன்ற அதிநவீன கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஈரோடு மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.  பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் மருத்துவ மனையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சராசரியாக  மாதந்தோறும் 60க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றபட்டு வருகின்றனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: