×

தொடர் மழையால் பயிர் சேதம் அறிக்கையை 29ம் தேதி அளிக்க வேண்டும் அலுவலர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்

ஒரத்தநாடு,ஜன.22: தொடர் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த அறிக்கையை, வரும் 29ம் தேதிக்குள் அளிக்க, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என வேளாண் உற்பத்தி துறை கமிஷனரும், முதன்மை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பொன்னாப்பூர் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள, நெல் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திர செயல்பாடுகளையும், தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயிர் பாதிப்புகளை வேளாண் உற்பத்தி துறை கமிஷனரும், முதன்மை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரியளவில் இழப்பை சந்தித்துள்ளனர் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இது விவசாயிகளுக்கு சோதனையான நேரம் தான். பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்,தோட்டக்கலை, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கணக்கீடு செய்து வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் முழுமையாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர் கூட விடுப்படாமல், அதன் அறிக்கையை வரும் 29ம் தேதிக்குள் அரசுக்கு தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு முறையாக அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்,தோட்டக்கலை, வருவாய் துறையினர் பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வாங்கி தர முயற்சி எடுத்து, விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். நெல் ஈரப்பதத்தை உலர்ந்தும் இயந்திரம் நல்ல முறையாக செயல்படுகிறது. தற்போது தஞ்சை மாவட்டத்தில், வேளாண் பொறியல் துறை சார்பில், தலா ரூ.12 லட்சம் மதிப்பில், புதிதாக இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பத்தை உலர்ந்தும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இது சோதனையில் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

Tags : Kagandeep Singh Bedi ,
× RELATED சென்னையில் மழைநீர் வடிகால்...