அதிராம்பட்டினம்,ஜன.22: அதிராம்பட்டினம் பகுதி கடற்கரையில் கடும் மூடு பனியால் மீன்டிக்க முடியாமல் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. மேலும் தரைப்பகுதியைவிட கடல் பகுதிகளில் மிக அதிகமாக பனிப்பொழிவு உள்ளதால் எதிர் எதிராக வரும் படகுகள் தெரியாமல் படகு ஒன்றுடனொன்று மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டு விடுகிறது. கடலில் விரித்த வலையும் தெரியாமல் தடுமாற்றம் ஏற்பட்டு வலைகளை தேடும் சூழல் ஏற்படுகிறது. இதனையடுத்து அதிராம்பட்டினம் கடற்பகுதியில் உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கித்தெரு, தரகர்தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.