அரியலூர், ஜன.22: அரியலூர் சிவன் கோயில் தெருவில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகரத்தின் தெற்கு பகுதி மக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்து பேசுகையில், நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் இல்லாததால் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. சாக்கடைகள் தேங்கி நிற்கின்றன. சமையலர், அமைப்பாளர் உள்ளிட்ட பெண்களுக்கு வழங்கப்படும் குறைவான சம்பள பணிகளுக்கே ஆளும் கட்சியினர் லட்சக்கணக்கில் பணம் கேட்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஆளும் கட்சியினர் நடத்த வேண்டிய மக்கள் கிராம சபை கூட்டத்தை எதிர் கட்சியினர் நடத்துகிறோம். எனவே, அதிமுக ஆட்சியை நிராகரிப்போம் என்றார். கூட்டத்தில் நகர செயலாளர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.