×

சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பெண்கள் விழிப்புணர்வு பேரணி

பரமக்குடி, ஜன.22:  பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்  சார்பாக, சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, பெண்களுக்கான ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தின் சார்பாக தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா அனுசரிக்கப்பட்டது. நேற்று மகளிருக்கான ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முதல்வர் குணசேகரன், பரமக்குடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் சாமுவேல் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். போக்குவரத்து ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ஐந்து முனை பேருந்து நிலையம், கிருஷ்ணா தியேட்டர் வழியாக அரசு கலைக்கல்லூரியில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவர்கள் மணிமாறன், விஜயகுமார், பேராசிரியர் கோவிந்தன்,காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ராஜ்குமார், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் பாரதி நன்றி கூறினார்.

Tags : Women Awareness Rally ,Road Safety Festival ,
× RELATED தலைக்கவசம் அணிவதன் அவசியம்...