சென்னை: சென்னையில் நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் 100 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்படுகிறது. இவை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னையில் இனி சிக்னலில் 120 செகண்ட் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. காரணம், சென்னை மாநகரில் ஸ்மார்ட் போக்குவரத்து சிக்னல்கள் விரைவில் வரவிருக்கின்றன. டிசம்பர் 31ம் தேதிக்குள் சுமார் 100 ஸ்மார்ட் போக்குவரத்து சிக்னல்கள் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிக்னல்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை தானாகவே கணக்கிட்டு, அதற்கேற்ப சிக்னல் நேரத்தை மாற்றியமைக்கும். இதனால், போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பப்படுகிறது. இந்த புதிய சிக்னல்கள் மஞ்சள் நிற கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த கேமராக்கள், சந்திப்பில் உள்ள ஒவ்வொரு திசையிலும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையையும், அவை செல்லும் வேகத்தையும் கண்காணிக்கும். அதற்கேற்ப, சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளின் நேரத்தை தானாகவே மாற்றும். போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே 90க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கம்பங்களை நிறுவியுள்ளது. டெய்லர்ஸ் ரோடு, சென்ட்ரல், பச்சையப்பன் கல்லூரி போன்ற சில முக்கிய சந்திப்புகளில் சோதனை ஓட்டமும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘டிசம்பர் 31க்குள், நகரில் சுமார் 100 கம்பங்கள் தயார் நிலையில் இருக்கும். எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள, மாதிரி சோதனைகள் செய்ய வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (கும்டா) மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து 165 இடங்களில் இந்த சிக்னல்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
விஐபி வாகனங்கள் செல்லும்போதும், வெள்ளம் அல்லது அவசர ஊர்திகள் செல்லும்போதும், மனித தலையீடு தேவைப்படும். அப்போது, இந்த சிக்னல்களை கைமுறையாக இயக்க முடியும். இந்த உண்மையான நேரத் தகவல்கள், எதிர்கால திட்டமிடலுக்கும் உதவும். மேம்பாலங்கள் மற்றும் நடை மேம்பாலங்கள் எங்கு தேவை என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த புதிய தொழில்நுட்பம், சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது,’ என்றனர்.
