×

மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை அகற்றிடும் புதிய நடவடிக்கை கடந்த 11.10.2025 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி, இதுவரை 12 சனிக்கிழமை நாட்களில் 1,587 பேரிடம் இருந்து 582.16 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 107 பேரிடம் இருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 41.36 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் அல்லது சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் அல்லது சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.

இதன் அடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாக சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Chennai ,
× RELATED பள்ளி விடுமுறையால் படையெடுப்பு...