×

ஒழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்கும் புனிதமான பொறுப்பை தாய் கைவிட்டுவிட்டால் அது குடும்பம், சமூகத்தின் அடித்தளத்தை வீழ்த்திவிடும்: ஆயுள் தண்டனையை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை: ஒழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்கும் புனிதமான பொறுப்பை தாய் கைவிட்டுவிட்டால் அது குடும்பம் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தை வீழ்த்திவிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கணவனை பிரிந்து 14 வயதான தனது மகளுடன் வசித்துவந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு அந்த சிறுமியை சுப்புராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக தாயிடம் சிறுமி புகார் தெரிவித்தபோது, வெளியில் சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன் என்று தாயும் மிரட்டியுள்ளார். இதன்பின்னரும் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில், தாயை பிரிந்து தந்தையிடம் சென்று முறையிட்டுள்ளார்.

பின்னர் சிறுமி அளித்த புகாரில், தாய் மீதும், அவரது காதலர் சுப்புராஜ் மீதும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் தாய்க்கும், சுப்புராஜுக்கும் ஆயுள் தண்டனை விதித்து 2020ல் தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளது. ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறி, மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில், நமது கலாச்சாரத்தில் தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியோருக்கு மேலாக, தாய் முதலிடத்தில் உள்ளார். ஒரு தாயின் முக்கிய கடமை குழந்தைகளை பாதுகாப்புடன், ஒழுக்கத்துடன் வளர்ப்பது. புனிதமான இந்த கடமையை கைவிட்டு விட்டால், அது குடும்பம் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தை வீழ்த்திவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Eicourt ,Chennai ,Chennai High Court ,Gowai district ,
× RELATED கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி...