×

பொற்றையடியில் பெண்ணிடம் செயின் பறிப்பு செல்போனை தவற விட்ட கொள்ளையன்

தென்தாமரைகுளம்,ஜன.22: பொற்றையடியில் பெண்ணிடம் செயின் பறித்த போது செல்போனை தவற விட்ட கொள்ளையன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் திருவட்டாரை  சேர்ந்தவர் கண்ணன் (40). அந்த பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.  வாரம் தோறும் வியாழக்கிழமை மனைவி உதயசூர்யாவுடன் (38) பொற்றையடியில்  அமைந்துள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் காலை சுமார் 8 மணியளவில்  தரிசனத்தை முடித்து விட்டு பொற்றையடி  ஜங்ஷனில் பஸ் ஏற 2 பேரும் காத்திருந்தனர்.அப்போது பைக்கில்  ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் உதயசூர்யாவிடம் உங்களுக்கு தமிழ்  தெரியுமா? என்று கேட்டுக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவரது கழுத்தில்  கிடந்த இரண்டரை பவுன்  செயினை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில்  பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். அப்போது பைக்கில் பின்னால்  இருந்த நபரின் செல்போன் தவறி கீழே விழுந்தது.உடனே அந்த பகுதி  மக்கள் செல்போனை எடுத்து வைத்துக்கொண்டு தென்தாமரைகுளம் காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.   போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மர்ம நபர்களின் செல்போனை  கைப்பற்றி  அவர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள்  கூடியுள்ள முக்கிய பகுதியான பொற்றையடி ஜங்ஷனில் துணிகரமாக பெண்ணின்  செயின் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : robber ,
× RELATED நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடி கைது