தக்கலை, ஜன.22: குமரி மாவட்டம் தக்கலை அருகே மருந்துகோட்டையில் இருந்து ஆனைகிடங்கு செல்லும் சானல்கரை சாலையில் ஏராளமான ரப்பர், வாழை ேதாட்டங்கள் உள்ளன. நேற்று காலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது மஞ்சாடிகோணம் பகுதியில் ஒரு சொகுசு கார் நின்றதை பார்த்தனர். அதில் வாலிபர் ஒருவர் படுத்த நிலையில் கிடந்தார். அருகில் மது பாட்டில், உணவு பொருட்கள் இருந்தன. அவர் போதையில் தூங்குவதாக நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாக அவர் அசைவின்றி இருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்து. காருக்குள் மருந்து பாட்டிலும், ஊசியும் கிடந்தது.விசாரணையில் அவர் குலசேகரம் மடத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (36) என தெரியவந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவி வனஜா சம்பவ இடம் வந்து பார்த்து இறந்தது சுபாஷ் தான் என்று உறுதி செய்தார்.