×

தக்கலை அருகே கடன் தொல்லையால் காருக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்த வாலிபர்

தக்கலை, ஜன.22: குமரி மாவட்டம் தக்கலை  அருகே மருந்துகோட்டையில் இருந்து ஆனைகிடங்கு செல்லும் சானல்கரை சாலையில் ஏராளமான  ரப்பர், வாழை ேதாட்டங்கள் உள்ளன. நேற்று காலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது மஞ்சாடிகோணம் பகுதியில் ஒரு சொகுசு கார் நின்றதை பார்த்தனர். அதில்  வாலிபர் ஒருவர் படுத்த நிலையில் கிடந்தார். அருகில் மது பாட்டில், உணவு பொருட்கள்  இருந்தன. அவர் போதையில் தூங்குவதாக நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாக  அவர் அசைவின்றி இருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தக்கலை போலீசுக்கு  தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்த போது அவர்  இறந்து கிடந்தது தெரியவந்து. காருக்குள் மருந்து பாட்டிலும், ஊசியும் கிடந்தது.விசாரணையில் அவர்  குலசேகரம் மடத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (36) என தெரியவந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவி வனஜா சம்பவ இடம் வந்து பார்த்து இறந்தது சுபாஷ் தான் என்று உறுதி செய்தார்.

சுபாஷுக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 7, 5 வயதில் இரண்டு பிள்ளைகள் உண்டு. சுபாஷ் குலசேகரத்தில் வெல்டிங் தொழில் நடத்தி வந்தார். தற்போது ஆசாரிபள்ளம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். கொரோனா காரணமாக தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதில் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்று வனஜாவை வலியுறுத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் தேங்காப்பட்டணம் சென்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் தற்போது விஷம் அருந்தி இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thakkala ,
× RELATED தக்கலை அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து