நெல்லை, ஜன. 22: நெல்லை அருகே செழியநல்லூர் குளத்தில் பராமரிப்பின்றி உடைந்த மதகால் தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் கங்கைகொண்டான் அடுத்துள்ள வடக்கு, தெற்கு செழியநல்லூர் கிராமம் உள்ளது. இங்குள்ள செழியநல்லூர் குளத்திற்கு சிற்றாறு மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேலும் பருவமழை காலத்தில் காட்டாற்று வெள்ளம் மூலம் குளம் நிரம்பி காணப்படும். செழியநல்லூர் குளத்தை நம்பி சுமார் 1500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. பருவமழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் நெல், வாழை பயிர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் இப்பகுதி மக்களுக்கு விளைச்சல் வீடு வந்து சேரும் கனவு, எப்போதும் கானல் நீராகவே உள்ளது. பொதுப்பணித்துறை அலட்சிய போக்கே இதற்கு காரணமென விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். செழியநல்லூர் குளத்தில் குடிமராமத்து பணிகள் செய்யாததால், பருவமழை காலத்தில் குளத்தில் தண்ணீர் தேங்கினாலும் சேதமடைந்த மதகுகள் வழியாக மழைநீர் வீணாக வெளியேறுவது வாடிக்கையாகி விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் சிற்றாற்றில் கரைபுரண்ட வெள்ளத்தால், செழியநல்லூர் குளம் நிரம்பி ததும்பியது.