செய்யாறு, ஜன.22: ெசய்யாறு அருகே சலவை தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர்(46), சலவை தொழிலாளி. இவரது மனைவி வேண்டா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு, கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் தனசேகர் தனது சொந்த கிராமமான செய்யனூருக்கு சென்றார். பின்னர், அனைவரும் கடந்த 17ம் தேதி வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த 17 சவரன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், பூட்டை உடைத்து உள்ளே சென்று நகைளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தனசேகர் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், நேற்று முன்தினம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார் வழக்குப்பதிந்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.