திருமுல்லைவாயலில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஆவடி:   ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் மருத்துவமனைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், கோயில்கள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், மற்றும் ஏராளமான வீடுகளும் உள்ளன. இச்சாலையை பயன்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும், ஆவடி பகுதிலிருந்து அம்பத்தூருக்கு சி.டி.எச் சாலையை பயன்படுத்தாமல், சோழம்பேடு சாலை வழியாக சென்று  வருகின்றனர்.  மேலும், இந்த சாலையின் இருபுறங்களிலும் உள்ள வணிக நிறுவனங்களில் முகப்புகள், விளம்பரப் பலகைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன.  கடைகள், வீடுகள் முன்பு சாலையை ஆக்கிரமித்து நான்கு, இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பி வந்தனர்.

இதனையடுத்து நேற்று காலை ஆவடி நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன்,  ஆய்வாளர் தினகரன் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் சோழம்பேடு சாலைக்கு வந்தனர். பின்னர், அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமித்து இருந்த வணிக நிறுவனங்களில் முகப்புகள், விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்தினர். மேலும், இப்பணிகள் இரு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  எனவே,  வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து சோழம்பேடு சாலை, குளக்கரை சாலை ஆகிய இரு சாலையில் அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: