மதுராந்தகம்: மாத்தூர் ஊராட்சி சிந்தாமணி கிராமத்தில் ஏரி நீரில் குடிசை வீடுகள் மூழ்கியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள், மேடான பகுதியில், தங்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கி தர நடவடிக்கை வேண்டும் வலியுறுத்துகின்றனர்.
மேல்மருவத்தூர் அடுத்த மாத்தூர் ஊராட்சி சிந்தாமணி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பல குடும்பத்தினருக்கு சொந்தமாக வீட்டுமனை கிடையாது. இதனால், சிலர் சிந்தாமணி - ஊனமலை சாலையோரத்தில், ஏரியை ஒட்டியபடி குடிசைகள் அமைத்து பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். பருவமழையின்போது, பெய்த மழையால், ஏரியில் தண்ணீர் நிரம்பி, பொதுமக்களின் தேவைக்கும், விவசாயத்துக்கு போதுமானதாக அமைந்தது. மீதம் இருந்த தண்ணீர், கலங்கல் வழியாக வெளியேற்றப்பட்டது. ஆனால், கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த தொடர் கனமழையால், ஏரி முழுவதும் மீண்டும் தண்ணீர் நிரம்பி, அருகில் வீடுகள், குடிசைகள் உள்ள பகுதியில் வழிந்தோடியது. இதில், குடிசைகள் முழுவதுமாக மூழ்கி, அங்கிருந்த பொருட்கள் நாசமாயின. பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறி, பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.