தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

திருவில்லிபுத்தூர், ஜன.21: திருவில்லிபுத்தூரில் கூலி தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் பழைய புது தெருவை சேர்ந்தவர் முத்து(35). இவர் பந்தல் போடும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது தாயார் வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டார். கடைக்குச் செல்லும்போது வழக்கம்போல் சாவியை வீட்டின் அருகில் வைத்து விட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி சாவியை எடுத்து திறந்து வீட்டுக்குள் புகுந்து  பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடிச் சென்றார்.

இது குறித்து திருவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ராக்கி மூலம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ராக்கி வீட்டின் அருகே உள்ள சக்கர குள படிக்கட்டுகளில் இறங்கி நின்றுவிட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: