2 நாட்களாக கருவி இயங்காததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி சர்வர் பழுதை சரிசெய்ய வலியுறுத்தல்

ஓமலூர், ஜன.21: ஓமலூர் வட்டாரத்தில் உள்ள ரேஷன்  கடைகளில், நேற்று முன்தினம் ஜனவரி  மாதத்திற்கான ரேஷன்  பொருட்கள் மற்றும் விடுபட்ட கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. ஆனால், ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் கருவிகள், சர்வர் பிரச்னையால் இயங்கவில்லை. இதனால், பொதுமக்களுக்கு 2  நாட்களாக பொருட்கள் விநியோகிக்க முடியவில்லை. காலை முதல் சுட்டெரிக்கும் வெயிலில் கால்கடுக்க  காத்திருந்தும், பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன்  திரும்பிசென்றனர். சர்வர் பழுதாகி இயந்திரம் இயங்காததற்கு, தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சர்வர் பிரச்னையை சரி செய்து, ரேஷன் கடைகளில் உள்ள கருவிகள் இயங்கச்செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: