அயோத்தியாபட்டணம், ஜன. 21: அயோத்தியாப்பட்டணம் அடுத்த வீராணம் அருகே உள்ள பூவனூர், பள்ளிப்பட்டி, வலசையூர், டி.பெருமா பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பாமக மற்றும் அதிமுகவினர் சந்து கடைகள் அமைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அயோத்தியாபட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ப்ரீத்தி மோகன், பாரதி ஜெயக்குமார் மற்றும் கட்சியினர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாகவது: வீராணம் சரகத்தில் பூவனூர் பேருந்து நிறுத்தம் அருகே சந்து கடையில் மதுபானம் விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், பஸ் ஸ்டாண்டில் இறங்கி தனியாக வீட்டுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. போதையில் ஆண்கள் கிண்டல் கேலி செய்வதால் அச்சமடைகின்றனர். இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் உதவியுடன் சந்து கடைகள் செயல்பட்டு வருவதால், போலீசார் கண்டுகொள்வதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.