மன்னார்குடி, ஜன.21: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யும் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் மழை நேரில் மூழ்கி சேதமடைந்து அழுகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில், சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு பாதிப்புக்குள்ளாகி உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, மன்னார்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பரவாக்கோட்டை, மகாதேவபட்டணம், உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி சேதமடைந்த சம்பா பயிர்களை முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை எம்பியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.