தூத்துக்குடி, ஜன. 21: தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 முத்துநகரைச் சேர்ந்த முத்துமாலை என்பவர் கடந்த 15ம்தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்விபத்து இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பெண்ணின் கணவர் கருப்பசாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார், எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.பின்னர் அமைச்சர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தோம். தெர்மல்நகரைச் சேர்ந்த கருப்பசாமி என்டிபிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். அறுந்து கிடந்த மின்கம்பியால் தாக்கப்பட்ட கருப்பசாமியை காப்பாற்ற முயன்ற போது அவரது மனைவி முத்துமாலை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து முதல்வரின் உத்தரவின் பேரில் ரூ.5 லட்சம் நிதி கருப்பசாமியுடம் வழங்கப்பட்டது. அவருக்கும் போதிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவரது கல்வி தகுதிக்கேற்ற வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவருக்கு வேலைவாய்ப்பிற்கும் பரிந்துரை செய்யப்படும். என்டிபில் நிறுவனத்திடம் அவரது கல்வி தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க கேட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவணம் செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஞானேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி பொறியாளர் அந்தோணிஜோசப், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், வக்கீல் ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.