புதுச்சேரி, ஜன. 21: அமைச் சரின் போராட்டத்தை தொடர்ந்து 17 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி அனுமதியளித்திருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலம் எந்த வகையிலும் வளர்ச்சி பெறக்கூடாது என கவர்னர் செயல்பட்டு வருகிறார். அவரை கண்டித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ளாமல் ஆணவப் போக்கோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து அமைச்சர் கந்தசாமி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினார்.தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதி, அமைச்சரை சந்திக்காமல் சர்வாதிகாரி போல நடந்து கொண்டார்.கவர்னர் ஜனநாயக முறைப்படியும் நடந்து கொள்வதில்லை. சட்டத்தையும் மதிப்பதில்லை. மக்கள் பிரச்னைகளை தீர்க்க நேரம் ஒதுக்கி தராதவர் துணை நிலை ஆளுநராக இருக்க தகுதியற்றவர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அமைச்சரின் போராட்டத்தை தொடர்ந்து தற்போது 36 கோப்புகளில் 17 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.இது தொடர்பாக தலைமை செயலர், நிதி செயலரை அழைத்து பேசினோம். தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு கட்டும் திட்டம், கிருமாம்பாக்கம் ரூ. 5 கோடியில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்டுவதற்கான முதல்நிலை நிதி ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புதியதாக முதியோர், விதவை உதவித்தொகை கொடுக்க ரூ. 9 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ரூ. 44 கோடிக்கு துறைமுக அபிவிருத்தி திட்ட கோப்புக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. கூட்டுறவு துறையில் பதவி உயர்வு மூலம் 8 துணை இயக்குனர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 17 கோப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.