புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்க ஒப்புதல் அமைச்சரின் போராட்டத்தால் 17 கோப்புகளுக்கு அனுமதி

புதுச்சேரி, ஜன. 21:  அமைச் சரின் போராட்டத்தை தொடர்ந்து 17 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி அனுமதியளித்திருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலம் எந்த வகையிலும் வளர்ச்சி பெறக்கூடாது என கவர்னர் செயல்பட்டு வருகிறார். அவரை கண்டித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ளாமல் ஆணவப் போக்கோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து அமைச்சர் கந்தசாமி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினார்.தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதி, அமைச்சரை சந்திக்காமல் சர்வாதிகாரி போல  நடந்து கொண்டார்.கவர்னர் ஜனநாயக முறைப்படியும் நடந்து கொள்வதில்லை. சட்டத்தையும் மதிப்பதில்லை. மக்கள் பிரச்னைகளை தீர்க்க நேரம் ஒதுக்கி தராதவர் துணை நிலை ஆளுநராக இருக்க தகுதியற்றவர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.  அமைச்சரின் போராட்டத்தை தொடர்ந்து தற்போது 36 கோப்புகளில் 17 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.இது தொடர்பாக தலைமை செயலர், நிதி செயலரை அழைத்து பேசினோம். தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு கட்டும் திட்டம், கிருமாம்பாக்கம் ரூ. 5 கோடியில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்டுவதற்கான முதல்நிலை நிதி ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புதியதாக முதியோர், விதவை உதவித்தொகை கொடுக்க ரூ. 9 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ரூ. 44 கோடிக்கு துறைமுக அபிவிருத்தி திட்ட கோப்புக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. கூட்டுறவு துறையில் பதவி உயர்வு மூலம் 8 துணை இயக்குனர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 17 கோப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இதனை காலத்தோடு செய்திருந்தால், அமைச்சர் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது.

புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்மை செய்வதாக நினைத்தால், அவர் புதுச்சேரி விட்டு காலி செய்து கொண்டு கிளம்ப வேண்டும்.  அமைச்சர் கந்தசாமியின் போராட்டத்தை முடித்துக்கொண்டு அழைத்து வருவதற்காக சென்ற என்னையும், அமைச்சர்களையும் அனுமதிக்கவில்லை. எங்கே நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பயந்து கொண்டு அனுமதிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் பாவம், அவர்களை மிரட்டி வைத்திருக்கிறார்.  பாஜகவினர் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ்  நிறைவேற்றவிலையென போராட்டம் நடத்துகின்றனர்.எங்களை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தும் பாஜக, கிரண்பேடி எதிர்த்துதான் நடத்துகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். இந்த உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.  பல நல்ல திட்டங்களை நிறைவேற்றவிடாமல் செய்துவிட்டு மக்களை ஏமாற்ற போராட்டம் நடத்துகிறார்கள். பாஜகவின் வேஷம் மக்களுக்கு நன்றாக தெரியும். இரட்டை வேடம் போடக்கூடாது.  காவல்துறை எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சட்டத்தை மீறிய சக்தி செயல்படுவதால், காவல்துறையினரை மிரட்டி, அவர் சொல்வதை செய்ய வைக்கிறார். மாவட்ட ஆட்சியர்  பூர்வா கார்க் அரசிடம் கலந்து பேசாமலே தன்னிச்சையாக 144 தடையுத்தரவு போட்டிருக்கிறார். இது குறித்து விளக்கம் கோராப்பட்டிருகிறது. சரியான பதில் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைச்சர் கந்தசாமி உடனிருந்தார்.

Related Stories: