புதுச்சேரி, ஜன. 21: புதுச்சேரியில் அரசு செவிலியர் வீட்டில் 40 பவுன் நகைகளை திருடிய அவரது மகனின் நண்பரை பிடித்து உருளையன்பேட்டை போலீசார் அதிரடியாக விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, வெண்ணிலா நகர், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் நிவர்ஷி ஜான்சன் (56). அரசு மருத்துவமனை செவிலியரான இவரது கணவர் ஜான்சன் இறந்து விட்ட நிலையில் மகனுடன் வசித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலங்களில் இவரது மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், அவரது தாய் மட்டும் வேலைக்கு சென்றார். கொரோனா காலம் என்பதால் அங்கேயே சில நாட்கள் நிவர்ஷி தங்கி பணியாற்றியதாக தெரிகிறது. இந்த காலத்தில் தனது நண்பரான கோவிந்த சாலையைச் சேர்ந்த மைக்கேல் சுதனை (24) அடிக்கடி நிவர்ஷியின் மகன் வீட்டிற்கு அழைத்து வந்தாராம். சில மாதங்களுக்குமுன்பு இருவரும் அடிக்கடி அங்கு சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நிவர்ஷி ஜான்சன், நீண்ட நாட்களுக்குபின் தனது பீரோவில் இருந்த நகைகளை நேற்று முன்தினம் சரிபார்த்துள்ளார். அப்போது அங்கு வைத்திருந்த 5 நெக்லஸ், 4 செயின், ஆரம், கம்மல் உள்ளிட்ட 35 எண்ணிக்கையில் சுமார் 40 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது மகனிடம் நிவர்ஷி ஜான்சன் கேட்டறிந்த நிலையில், அவரது நண்பர் மைக்கேல் சுதனை தவிர கடந்த சில மாதங்களில் வேறு யாரும் வீட்டிற்குள் வந்து செல்லவில்லை என்பதை உறுதியான நிலையில், இதுபற்றி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நிவர்ஷி ஜான்சன் புகார் அளித்தார்.