நாகர்கோவில், ஜன. 21: நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷனில் பூங்கா வசதியுடன் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர் நேற்று திறந்துவைத்தார். நாகர்கோவில் மாநகர பகுதியில் காலை, மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. தற்போது மாநகர பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதின்விளைவாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி தற்போது குறைந்துவருகிறது. இருப்பினும் விழா காலங்கள், பண்டிகைகாலங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் வர்த்தக நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் சாலையோரம் கண்டபடி நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யும் வகையில் மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது எஸ்பி அலுவலக சாலையின் ஒருபகுதி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, வேப்பமூடு ஜங்ஷன், அலெச்சாண்டிரா பிரஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் நாகர்கோவில் நாகராஜா திடல் பகுதியில் கார் மற்றும் சுற்றுலா வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.