×

கொடைக்கானலில் குப்பை அள்ளும் வாகனம் மாயம் அதிமுக பிரமுகர் மீது புகார்

கொடைக்கானல், ஜன. 21: கொடைக்கானல் வில்பட்டி கிராம ஊராட்சிக்கு சில சமூகஆர்வலர்கள், தன்னார்வலர்கள் கடந்த 2014ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பிலான குப்பை அள்ளும் டிராக்டரை டிரைலருடன் வழங்கினார். இதனை அப்போது தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த மலைச்சாமி பெற்று கொண்டார். ஆனால் மலைச்சாமி, அந்த வாகனத்தை ஊராட்சியின் பெயரில் பதிவு செய்யாமல் தனது பெயரில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்கண்ணன் கடந்த ஆண்டு அந்த டிராக்டரின் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஊராட்சி பெயருக்கு பதிவு செய்து வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் இன்றளவும் டிராக்டர் மலைச்சாமி பெயரிலே இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்பட்டி ஊராட்சி அலுவலக பகுதியில் இருந்த அந்த டிராக்டர் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவர் குப்பபம்மாளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஊராட்சிக்கு சொந்தமான டிராக்டரை முன்னாள் தலைவர் மலைச்சாமி திருடி விட்டதாக கூறி கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kodaikanal ,AIADMK ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...