ஊட்டி, ஜன.21: வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் பாதிக்காமல் இருக்க சூரிய சக்தி மின்வேலி அமைக்க தகுதி வாய்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பாதிக்காத வண்ணம் விளை பொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடன் தமிகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் சூரிய சக்தி மின்வேலியினை ரூ.3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. சூரிய ஒளி மின்வேலி அமைப்பதால் விலங்குகள், வேட்டைகாரர்கள் உள்ளிட்டோர் நுழைவது தடுக்கப்படும். விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலி அமைப்பினை தேர்வு செய்யலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அல்லது 565.58 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.மேலும் சூரிய சக்தி மின்வேலி அமைப்பிற்கான செலவுத்தொகையில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.18 லட்சம் மானியம் வழங்கப்படும்.