கோவை, ஜன.21: கோவை ஈச்சனாரி சந்திப்பில் இரு தினங்களுக்கு முன் ஆம்னி பேருந்து, வேன் மோதிய விபத்தில் இருவர் பலியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
கோவை சீரபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர், வேளாண் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராஜாமணி, பேரன்கள் கிஷோர், ரித்தீஸ் மற்றும் கார் ஓட்டுநர் முகமது ஆசிக் என 5 பேரும் உடுமலைபேட்டையில் இருந்து கார் மூலம் கடந்த 18ம் தேதி கோவை வந்தனர். அப்போது கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை ஈச்சனாரி சந்திப்பில் ஆம்னி பேருந்து, இவர்கள் வந்த வேன் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜாமணி மற்றும் பழனியை சேர்ந்த முகமது ஆசிக் இருவரும் பலியாகினர். ராஜாமணியின் கணவர் நடராஜன், பேரன் கிஷோர் இருவரும் ஆபத்தான நிலையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடராஜன் நேற்று உயிரிழந்தார். இதனால், ஈச்சனாரி விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நடராஜனின் பேரன் கிஷோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.