பல்லடத்தில் 43 பேர் மாயமான வழக்குகளுக்கு ஓராண்டில் தீர்வு

திருப்பூர், ஜன. 20: பல்லடத்தில் ஆட்கள் மாயமான பிரிவில் 43 வழக்குகளில் சிறுவர், சிறுமி, பெண்களை மீட்ட முதல் நிலை காவலரை எஸ்பி. பாராட்டி வெகுமதி வழங்கினார். திருப்பூர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். கடந்ததாண்டில் பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில்  ஆள்மாயம் பிரிவின் கீழ் பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோர் காணாமல் போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 50 வழக்குகள் பாலமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டன.

தன்னிடம் அளிக்கப்பட்ட 50 வழக்குகளில் 43 வழக்குகளில் காணாமல் போன சிறுவர், சிறுமிகள், பெண்களை அவர் கண்டுபிடித்து மீட்டார். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் அனைவரும் அவரவர் பெற்றோர், காப்பாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக காணாமல் போனவர்களை கண்டுபிடித்த பெருமை முதல் நிலை காவலர் பாலமுருகனுக்கு கிடைத்துள்ளது. இதையறிந்த மாவட்ட எஸ்பி. திஷா மித்தல் பாலமுருகனை நேரில் அழைத்து வெகுமதி அளித்து, சிறப்பாக பணி செய்துள்ளதாக கூறி பாராட்டினார்.

Related Stories: