மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

கோவை, ஜன. 20: கோவை மாவட்டத்தில் புதியதாக 58 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாவட்டத்தில் புதியதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 749-ஆக உயர்ந்தது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 98 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 531-ஆக உள்ளது.

தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 554 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா காரணமாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 55 வயது முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 664-ஆக உள்ளது.

Related Stories: