ராகுல்காந்தி பிரசாரத்தையொட்டி காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

ஈரோடு, ஜன. 20:  தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வரும் 24ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இது குறித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி. ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வரும் 24ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி அவருக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

தலைவர் ராகுல் காந்தி 24ம் தேதி மதியம் 2 மணிக்கு அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து, அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார். ராகுல் காந்தி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (20ம் தேதி) ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள ஜவஹர் இல்லத்தில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

Related Stories: