ஆட்டையாம்பட்டி, ஜன. 20: ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள எஸ்.பாலம் பகுதியில் வீரபாண்டி துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, அரியானூர், காக்காபாளையம், இளம்பிள்ளை சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் விசைத்தறி கூடங்கள் வைத்துள்ளவர்கள் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரமாக மின்சாரம் வழங்கவில்லை. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது, பராமரிப்பு காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பின் தற்போதுதான் விசைத்தறி கூடங்கள், தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் இயங்குகிறது. தவிர கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில், இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், வியாபாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.