×

கிண்டியில் பாஜ உயர்மட்ட குழு கூட்டம் அதிமுகவிடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற குழு அமைக்க முடிவு: மேலிட, தமிழக பாஜ தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: கிண்டியில் நடைபெற்ற பாஜ உயர்மட்ட குழு கூட்டத்தில், கூட்டணியில் அதிமுகவிடம் 70 தொகுதிகள் கேட்டு பெறுவதற்கு குழு அமைப்பது குறித்து பாஜ தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அதிமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்று அமித்ஷா தமிழக பாஜவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜவினர் பேசி வருகின்றனர். ஆனால் தேமுதிக மூத்த நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற தங்களது ஆலோசனையை கட்சி மேலிடத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

பாமகவில் தற்போது ராமதாஸ் அணி, அன்புமணி அணி என 2 பிரிவு உள்ளது. ராமதாஸ் அணி திமுகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. எனவே, அதிமுக – பாஜ கூட்டணியின் பலம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென கதவை மூடிவிட்டார். எனவே கூட்டணியிலாவது இணைக்கலாமா என பாஜ திட்டமிட்டு வருகிறது.

மேலும், நயினாருக்கு எதிராக கருத்து தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் மற்றும் டிடிவியை அண்ணாமலை சமாதானம் செய்து வருகிறார். இந்த சூழலில் தான், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் பயணமாக டெல்லி சென்றார். அவர், நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணி விவகாரம், எத்தனை தொகுதிகளில் அதிமுகவிடம் கேட்டு பெறுவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சுமார் 70 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலையும் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக சொல்லப்பட்டது. அதிமுகவிடம் 55 தொகுதிகளுக்கு குறையாமல் கேட்க வேண்டும் என்று முடிவு செய்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. இத்தகைய சூழலில், தமிழக பாஜ உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்துக்கு, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கேசவன், பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்பி பொன்.ராதாகிருஷ்ணன், மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டெல்லி சென்று விட்டு வந்த இரு தினங்களில் நயினார் நாகேந்திரன் கூட்டும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜவின் பணி மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தேர்தல் களத்தில் பாஜ தனித்து களமிறங்குமா அல்லது கூட்டணி அரசியலுக்கு முன்னுரிமை அளிக்குமா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான விவாதங்களும் இந்த கூட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள், தொகுதி வாரியான நிலவரம், பலவீனமான பகுதிகளில் கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவது, சமூக வாக்கு வங்கி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் உத்திகள் மேலும் மற்றும் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தமிழகம் வருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கூட்டணியில் அதிமுகவிடம் இருந்து பாஜவுக்கு எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது குறித்து நீண்ட நேரம் விவாதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலிட தலைவர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தொகுதிகளை கேட்டு பெறுவது குறித்து பாஜவில் தனி குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

* நாளைக்கு தேர்தல்னாலும் நாங்க ரெடி…
தமிழக பாஜ உயர்மட்ட குழுக் கூட்டம் முடிந்த பிறகு, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘என்னுடைய யாத்திரை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த யாத்திரை ஜனவரி 9ம்தேதி நிறைவடைய இருக்கிறது. யாத்திரையின் நிறைவு கூட்டத்துக்கு பிரதமர் மோடி அல்லது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவார்கள். அவர்களிடம் நேரம் கேட்டு தமிழகம் அழைக்க திட்டமிட்டுள்ளோம். நாளையே தேர்தல் வந்தாலும் எதிர் கொள்ள பாஜ தயாராக உள்ளது. மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். பாஜ மேலிட தேர்தல் பொறுப்பாளர்கள் பியூஸ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் வரும் 23ம்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளனர்’’ என்றார்.

Tags : BJP ,level ,Guindy ,AIADMK ,Tamil Nadu ,Chennai ,Amit Shah ,AIADMK… ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...