ஊட்டி,ஜன.19: நீலகிரி மாவட்டத்தில் 9 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 218 பள்ளிகள் செயல்பட உள்ளது. இதற்காக பள்ளி வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இவை மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைகாட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்று வருகின்றனர். இம்மாத துவக்கத்தில் பொங்கலுக்கு பிறகு பொதுத்தேர்வு எழுதும் 10,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி இன்று (19ம் தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.