குன்னூர்,ஜன.19: தமிழக தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணித்துறை டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் நேற்றுஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்து பின்னர் குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு வருகை புரிந்தார். குன்னூர் பொறுப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள மீட்பு கருவிகளை ஆய்வு செய்தார்.அணிவகுத்து நின்ற தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்து அங்கு மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் விரைவாக ஏறும்மாறு உத்தரவிட்டார். உடனடியாக தீயணைப்பு வீரர் கயிற்றின் உச்சி வரை சென்றார். வீரரின் திறமையை பார்த்து டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.