வருசநாடு, ஜன. 19: கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சந்திரா சந்தோசம் தலைமை வகித்தார். பி.டி.ஒ முத்துப்பாண்டி, திருப்பதிவாசன் முன்னிலை வகித்தனர். இதில் நடந்த விவாதம் வருமாறு: முருகன்: கடந்த ஓராண்டாக ஊராட்சி ஒன்றியத்தில், எவ்வித வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. இதனால் மக்களின் முக்கிய பிரச்னைகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை. பி.டி.ஒ., முத்துப்பாண்டி: கடந்த சில மாதங்களாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. சிலம்பரசன்: ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை சம்பந்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.