வருசநாடு, ஜன. 19: மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பார்வதிஅன்பில்சுந்தரபாரதம். இவருக்கும், அதே ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்த கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பி.டி.ஒ. திருப்பதி வாசனிடம், ஊராட்சி தலைவர் மனு கொடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த டிச.31ல் புதிய ஊராட்சி செயலாளராக ஆங்கன் என்பவரை நியமித்து அதற்கான ஆணையை பி.டி.ஓ. பிறப்பித்தார். ஏற்கனவே பணிபுரிந்த கண்ணதாசன் பொறுப்புகளை புதிய ஊராட்சி செயலாளரிடம் ஒப்படைக்கப்படாமல் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு வந்தார். இதனால், மக்கள் பணிகளை செய்ய முடியாமல் ஊராட்சி தலைவர் சிரமப்பட்டனர். இது தொடர்பாக பி.டி.ஒவிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவர் பார்வதி அன்பில்சுந்தரபாரதம், நேற்று ஊராட்சி அலுவலக பூட்டை உடைத்து அலுவலகத்திற்குள் சென்று பணியாற்றினார்.
இது குறித்து ஊராட்சித் தலைவர் பார்வதி அன்பில்சுந்தரபாரதம் கூறுகையில்: மயிலாடும்பாறை ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் கடந்த டிச.31ம் தேதி நியமிக்கப்பட்டு இதுவரை அவரிடம் பழைய ஊராட்சி செயலாளர் கண்ணதாசன் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு வீட்டு வரி மற்றும் தொழில் ரசீது போட முடியவில்லை. மேலும் மக்களின் முக்கிய அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை. இதற்கு முறையான தீர்வு கிடைக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.