×

சின்னமனூரில் ஆமை வேகத்தில் நகரும் கால்வாய்ப் பணி சாலையோர மண்ணால் போக்குவரத்து இடையூறு

சின்னமனூர், ஜன. 19: சின்னமனூரில் கால்வாயை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடந்து வரும் நிலையில், சாலையோரம் குவிக்கப்பட்ட மண்ணால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சின்னமனூரில் உள்ள தேனி ரோட்டில் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவிலிருந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளைவு வரை, சாலையோரக் கால்வாயை அகலப்படுத்தும் பணி அமை வேகத்தில் நடந்து வருகிறது.இப்பணிக்காக தோண்டிய மண்ணை சாலையோரமாக குவித்து வைத்துள்ளனர். இப்பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், போக்குவரத்து மிகுந்த சாலையாகும்.

இந்நிலையில், சாலையில் மண் குவிக்கப்பட்டுள்ளதாலும், கட்டுமானப் பணி மந்த கதியில் நடப்பதாலும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், கால்வாய் பள்ளத்திற்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, கால்வாய் அகலப்படுத்தும் பணியை துரிதப்படுத்துவதுடன், மண்ணை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnamanur ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி