×

வயல்களில் தண்ணீரை வெளியேற்ற கோரி ஊரணங்குடி மக்கள் மறியல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.19: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து உப்பூர் செல்லும் வழியில் உள்ளது மேல ஊரணங்குடி கிராமம். இங்கு நெல் கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ளன. கடலூர் கண்மாய் நீரை திறந்து வெளியேற்றினால் மட்டுமே, இங்கு வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் குறையும். எனவே கண்மாய் நீரை வெளியேற்ற வலியுறுத்தி ஊரணங்குடி விவசாயிகள் உப்பூர் செல்லும் ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...