பரமக்குடி, ஜன.19: தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி அழுகிய நெல், மிளகாய், சிறு தானிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது. பரமக்குடியில் ஏஐடியுசி மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஜீவாவின் 58வது நினைவு நாளையொட்டி அவரின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் பேசினார். போக்குவரத்து கழக தலைவர் செல்வராஜ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ராமநாதபுரத்தில் விவசாய விரோத சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் குடியரசு தினத்தன்று பரமக்குடியில் தேசிய கொடி ஏந்தி இரு சக்கர வாகன பேரணி நடைபெறும்.