×

உரிய இழப்பீடு வழங்ககோரி மனு திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் கொத்தனார், சமையல்காரர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி, ஜன. 19: ரங்கம் புதுத்தெரு அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (56), கட்டிட தொழிலாளி. இவர் குடிப்பழக்கம் காரணமாக குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் மாரிமுத்து தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி குடித்து விட்டு வந்ததால் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மதுவில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி கிடந்த மாாிமுத்துவை உறவினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து ரங்கம் எஸ்ஐ மோகன்ராஜ் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.
மற்றொரு சம்பவம்: திருச்சி சீராத்தோப்பு குடித்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (73). சமையல் தொழிலாளி. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 3 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தும் குணமாகாததால் வெறுப்படைந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த 16ம் தேதி சமையல் வேலைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு திருச்சி வந்தார். அங்கு பூச்சி மருந்து குடித்து பெரியகடைவீதியில் மயங்கி கிடந்தார். தகவலறிந்த கோட்டை போலீசார் கிருஷ்ணமூர்த்தியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆடுமேய்த்த சிறுமியிடம் சில்மிஷம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்நத 16 வயது சிறுமி அப்பகுதியில் நேற்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது தலையில் ரத்த காயத்துடன் நினைவிழந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா மற்றும் வையம்பட்டி போலீஸார் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கால்நடை மேய்ச்சலில் இருந்த சிறுமியிடம் 2 இளைஞர்கள் செல்போனை காண்பித்து தகவல் கேட்பதுபோல் கேட்டு அங்கிருந்து தூக்கி சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது சிறுமியை தலையில் கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமி மற்றும் பொதுமக்கள் அளித்த அடையாளங்களை கொண்டு சந்தைபேட்டை அருகே இரு இளைஞர்களை பிடித்த போலீஸார், மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் மிதந்த ஆண் சடலம்: தொட்டியம் அருகே மேலகார்த்திகைபட்டி கிராமம் உள்ளது. இங்கு நாச்சி என்பவருடைய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக தொட்டியம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். சடலம் முகம் அழுகிய நிலையில் சேதமடைந்திருந்தது. இறந்து போனவர் ஆண் சடலமாகும். வெள்ளை நிற சட்டையும், கருப்பு கலரில் டிராயரும் அணிந்திருந்தார். இறந்து போன நபர் யார், கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து கொண்டு வந்து போட்டனரா, தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரயில்வே இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி: சென்னை பெரம்பூர் ஐசிஎப்பில் ரயில்வே பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ரிச்சர்டு ஆண்டனி. இவரது சொந்த வீடு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருணாசல நகர் 5வது குறுக்கு தெருவில் உள்ளது. இவரது மனைவி திருச்சியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் பூட்டி கிடக்கும் எ.புதூரில் உள்ள வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக ரிச்சர்டு ஆண்டனிக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நேற்று அங்கு சென்ற ரிச்சர்டு ஆண்டனி வீட்டில் சோதனை செய்தார். வீட்டிற்குள் பொருட்கள் ஒன்றும் இல்லாத நிலையில் பீரோவில் வைத்திருந்த முக்கிய பைல்கள் (கோப்புகள்) மட்டும் மாயமாகி இருப்பதாக எ.புதூர் போலீசுக்கு தகவல் அளித்தார். மேலும் இதுகுறித்து புகார் அளிக்காத நிலையில் எ.புதூர் போலீசார் வீட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Petitioner ,incidents ,chef ,Trichy ,suicide ,
× RELATED பவானி சுற்று வட்டாரத்தில் கொளுத்தும்...