மன்னார்குடி, ஜன.19: சுற்றுச் சூழலைக்காக்க தேர்தல் அறிக்கையில் 33 சதவீதத்திற்கு காடுகளின் பரப்பளவை விரிவாக்குவோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : சுற்றுச் சூழலை காக்க தவறியதாலும், சூழலுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து மக்கள் ஈடுப்பட்டு வருவதாலும் பருவம் தவறி மழை பெய்து டெல்டா பகுதி முழுவதும் நெற்பயிர்கள் அழுக தொடங்கியுள்ளது. பருவ மழைக்காலங்களில் மழை பெய்தாலும் கூட ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை பொழிவு ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கொட்டி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்க நாம் சுற்றுச்சூழலை பேணி காக்க வேண்டும். ஊராட்சிகள் தோறும் புறம்போக்கு நிலங்களிலும், மந்தைவெளி களிலும், நீர் நிலைகளைச் சுற்றிலும் அதிக மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்.