மன்னார்குடி, ஜன.19: சம்பா அறுவடையை இழந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடாக பெற்றுத்தர வலியுறுத்தி வரும் 22ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளதாக பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், சம்பா அறுவடை துவங்க உள்ள நிலையில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வருவது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் பேரிடர் திட்டத்தின் மூலமாக இடுபொருள் இழப்பீடாக 100 சதவீதம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.