திருத்துறைப்பூண்டி, ஜன.19: திருத்துறைப் பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய, நகரம் சார்பில் தொடர் மழையில் அழுகிய நெற்பயிர்களுடன் ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகம் முன் நிவாரணம் கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தனர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு ஜோதிபாசு, மாவட்ட குழு சுப்பிரமணியன், சாமிநாதன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அழுகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னதாக வேதாரண்யம் சாலை அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் வந்தடைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.