கணவன், மனைவி மீது தாக்குதல்

நாகர்கோவில், ஜன.19: நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (57). இவரது மகன் நிஷாந்த். இவருக்கும், மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் அபி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் அபி மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு குறித்து, போலீசில் தகவல் கூற போவதாக ராஜ்குமார் கூறினார். இதனால் அபி மற்றும் அவரது நண்பர்கள், ராஜ்குமார் மீது ஆத்திரம் அடைந்து தகராறு செய்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் அபி மற்றும் அவர்களது நண்பர்களை கண்டித்து அனுப்பினர். இந்த நிலையில் திருமண வீட்டில் இருந்து ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ரத்தினபாய் ஆகியோர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இருளப்பபுரம் பகுதியில் வைத்து அபி மற்றும் அவரது கூட்டாளிகள் தடுத்து நிறுத்தி ராஜ்குமாரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வந்த ரத்தினபாயை, அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் அபி மற்றும் அவரது கூட்டாளிகள் அஜித், மூர்த்தி உள்பட 7 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: