கடலூர், ஜன. 19: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிந்த மனைவியை சேர்த்து வைக்க கோரி மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசுந்தர் (35). இவர் மாற்றுத்திறளாளி. இவரும் கடலூர் குண்டுஉப்பலவாடி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த முத்துசுந்தர் ஒரு கையை இழந்த நிலையில், காலும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி லட்சுமி இவரை பிரிந்து குழந்தைகளுடன் வேறு நபருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துசுந்தர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வந்த நிலையில் மனைவியை மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு திடீரென பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து அவரை காப்பாற்றினர்.