புதுச்சேரி, ஜன. 19: புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க்கை கடந்த 6ம்தேதி பார்வையாளர்கள் சிலர் பார்த்துச் சென்ற நிலையில் அப்போது அவருக்கு கொடுத்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக விஷம் கலந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக சிறப்பு பணி அதிகாரியான சுரேஷ்ராஜ், கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள கலெக்டரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தண்ணீருக்கு பதிலாக விஷத்தன்மையுள்ள நிறமில்லா திரவம் கலந்து தரப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் கோரிமேடு போலீசார் 284 (உயிருக்கு அபாயம் தரும் நச்சு பொருட்களை கவனக்குறைவாக வழங்குதல்) பிரிவின்கீழ் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். கலெக்டருக்கு எதிரான திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் டிஜிபி உத்தரவுக்கிணங்க இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கலெக்டருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் விஷத் தன்மை உள்ளதா? என்பதை கண்டறிய அதை ஐதராபாத் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிய சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். கலெக்டரின் உதவியாளர், எம்டிஎஸ் பணியாளர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. இதில் தண்ணீர் பாட்டிலை கலெக்டருக்கு கொடுத்த நபர், கண்டறியப்படாத நிலையில் அடுத்த கட்ட விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.